இப்படித்தான்
காஸாவின் குழந்தைகளைத்
தேடித்தேடிக்
கொன்று குவித்தார்கள்
கொஞ்சம் விட்டிருந்தால்
பசியாலோ
குளிராலோ
அவர்களே
செத்துப் போயிருப்பார்கள்
திறந்த வானத்தின் கீழ்
ஒளிய இடமின்றி
ஓடிக் கொண்டிருந்தவர்களை
தேடித்தேடிக்
கொன்று குவித்தார்கள்
இலக்கே
குழந்தைகள்தான்
என்பது போல
வெறிபிடித்த மிருகமாய்த்
தின்று தீர்த்தார்கள்
பாலஸ்தீன நிலமெங்கும்
பாய்ந்தோடிய
குழந்தைகளின் இரத்தத்தைக்
குடித்துச் செரித்தார்கள்
பாருங்களேன்
அந்த
யுத்த வெறியர்களுக்கு
இன்னும் அடங்கவில்லை பசி
ஈரானின் மீது
தாக்குதலைத் தொடங்கியதும்
குண்டு விழுந்தது
பள்ளிக்கூடத்தில்
யுத்தமென்றால்
என்னவென்று தெரியுமா
அந்தக் குழந்தைகளுக்கு
யுத்தத்தைத் தொடங்க
அமெரிக்கா சொல்லும்
பொய்கள்தான்
என்னவென்று புரியுமா
அந்தக் குழந்தைகளுக்கு
இஸ்ரேலின் இதயத்தில்
மானுட வெறுப்பும்
யுத்த வெறியும்
எதற்காக நிறைந்திருக்கிறது
என்பதை அறிவார்களா
அந்தக் குழந்தைகள்
உலக ஒழுங்கு
அணு ஆயுதம்
ஆயுத வியாபாரம்
பணப்பசி
இனவெறி
இப்படி எதையாவது
அறிவார்களா
அந்தக் குழந்தைகள்
நூற்று அறுபத்தியைந்து
குழந்தைகள்
படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
வெள்ளைத் துணியில்
வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும்
அந்தப் பிஞ்சுகளைப்
பார்க்க முடியவில்லை
அவர்களுக்காக
அவசர அவசரமாக
சின்னஞ்சிறிய அளவில்
தோண்டப்பட்டிருக்கும்
கல்லறைகளைப்
பார்க்க முடியவில்லை
ஏ அமெரிக்கர்களே
ஏ இஸ்ரேலியர்களே
எப்படி வாழப்போகிறீர்கள்
இந்த பூமியில்
எத்தனை கோபம்
எத்தனை சாபம்
உண்மையிலேயே உங்களுக்கு
வெட்கமாக இல்லையா!
ஜோசப் ராஜா
