மக்களுக்காக
சேவைசெய்ய வந்திருக்கும்
கணக்கற்ற கட்சிக்காரர்களே
பாராளுமன்ற உறுப்பினர்களே
நாடாளுமன்ற உறுப்பினர்களே
இரயில்வே துறையின்
அறிவுஜீவிகளே
மாண்புமிகு
பிரதமர் அவர்களே
இந்தக் கவிதையின்
நாயகரான
மாண்புமிகு
இரயில்வே துறை
அமைச்சர் அவர்களே
ஓர் அற்புதமான
அனுபவத்தை
பெறுவதற்காக
அழைக்கிறேன் உங்களை
உங்கள் தகுதிக்கும்
உங்கள் உயரத்திற்கும்
உங்கள் வாழ்க்கைத் தரத்திற்கும்
வருவீர்களா என்பது சந்தேகம்தான்
ஆனாலும்
அழைக்கிறேன்
செங்கல்பட்டு
சென்னை கடற்கரை
மார்க்கமாக
மின்சார இரயிலில்
பயணம் செய்ய வாருங்கள்
ஒருவேளை
உயிர்மீது பயமிருந்தால்
இரயில் நிலையத்தின்
ஏதாவது ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டு பாருங்கள்
ஆண்களும் பெண்களும்
மாணவர்களும் குழந்தைகளும்
எப்படியெல்லாம்
சாகசப் பயணம் மேற்கொள்கிறார்கள்
என்பதைப் பாருங்கள்
எக்மோர்
இரயில் நிலையத்தைச் சீரமைப்பதற்காக
எத்தனை பேர்
சீரழிய வேண்டும்
என்று கேட்கிறார்கள்
ஒவ்வொரு நாளும்
இலட்சம் மனிதர்கள்
பயணிக்கக்கூடிய வழித்தடத்தில்
மாற்று ஏற்பாடு செய்யாமல்
என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்று
அற்புதமான வார்த்தைகளைத்
தேடித்தேடி
காலையிலும் மாலையிலும்
உங்களை
அர்ச்சனை செய்வதை
ஒருமுறை கேளுங்கள்!
ஜோசப் ராஜா
