தரையில்
சிகப்பு நட்சத்திரங்களும்
வானில்
வெள்ளை நட்சத்திரங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்த
நீண்ட அந்த
இரவின் முடிவில்
எழுதுகிறார் வேகமாக
பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின்
முதல் அரசியல் சாசனத்தை
நிலங்கள் அனைத்தும்
பொதுவுடமையாக்கப்படும் என்று
நிலக்கிழார்கள்
நடுநடுங்கிப் போகிறார்கள்
குலாக்குகளின் இதயங்கள்
கொதிக்கத் தொடங்குகிறது
விவசாயிகள்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
குதித்துக் கொண்டாடுகிறார்கள்
அடிமைகளாய்
ஆண்டாண்டு காலங்களாக
வியர்வையையும் ரத்தத்தையும்
உரமாக ஊற்றிய
அன்னை வயலை
ஆசைஆசையோடு
முத்தமிட்டு முத்தமிட்டு
மகிழ்கிறார்கள்
புதிய விடியலில்
புதியதைப் பார்த்த பிரமிப்போடு
அதுவரை கண்டிராத
தலைவரைப் பார்த்த
ஒட்டுமொத்த ரஷ்யாவும்
ஒருமித்துக் குரலுயர்த்துகிறது
தவாரிஷ் லெனின் வாழ்க
தவாரிஷ் லெனின் வாழ்க
கோஷங்கள்
உலகத்தின் காதுகளில்
ஓங்கி விழுகிறது
கோஷங்கள்
உலகத்தின் இதயங்களைத்
துளைத்துச் செல்கிறது
அன்றும் கூட
உலகத்தின்
மூலை முடுக்குகளிலெல்லாம்
முணுமுணுக்கப்பட்டது
சுரங்கத் தொழிலாளர்கள்
ஆலைத் தொழிலாளர்கள்
ஆசிய விவசாயிகள்
ஐரோப்பிய விவசாயிகள்
என எல்லோரும்
மாறிமாறி
கேட்டுக் கொண்டார்கள்
யார் லெனின்
யார் லெனின் என்று
அந்தக் கேள்வியில்
அவ்வளவு ஆசைகள்
நிரம்பியிருந்தது
அந்தக் கேள்வியில்
விடுதலையின் வேட்கை
பொதிந்திருந்தது
அந்தக் கேள்வியில்
விடியலைப் பார்க்கும் ஆர்வம்
நிறைந்திருந்தது
அந்தக் கேள்விக்குள்
புரட்சியின் மீதான நேசம்
புதைந்திருந்தது
வரலாற்றின் கூரிய விழிகளை
தன்னுடைய தேசத்தை நோக்கி
நிலைகுத்தி நிற்க வைத்த
மாபெரும் தலைவரை
அவ்வளவு ஆசையாக
நெஞ்சத்தில்
ஏந்திக் கொண்டார்கள்
உலகமெங்கிலுமுள்ள
ஏழைகளும் எளியவர்களும்!
ஜோசப் ராஜா
(2018 ல் வெளிவந்த, தவாரிஷ் லெனின் கவிதைத் தொகுப்பிலிருந்து)
