எதுவும் மிஞ்சாது

ஜனாதிபதியோ
அதிபரோ
பிரதமரோ
முதலமைச்சரோ
இல்லை
இவர்களுக்குப் பின்னால்
ஜனநாயகப் போர்வையை
வசதியாகப் போர்த்திக்கொண்டு
நாட்டின் வளங்களை
வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும்
முதலாளிகளோ
அல்ல
அல்லவே அல்ல

மக்கள் தான்
ஆண்டாண்டு காலங்களாக
அழுத்தப்பட்ட மக்கள்தான்
காலங்கலமாக
கசக்கிப் பிழியப்பட்ட
மக்கள்தான்
வீடில்லாத மக்கள்தான்
உணவில்லாத மக்கள்தான்
வேலையில்லாத மக்கள்தான்
நிம்மதி இல்லாத மக்கள்தான்

வரலாற்றை
மாற்றி எழுதுவார்கள்
தேசத்தை
தலைகீழாய்ப்
புரட்டிப் போடுவார்கள்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தக் கோபத்திற்கு முன்னால்
மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தப் பேரலைக்கு முன்னால்
அடங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தப் பெரு நெருப்பிற்கு முன்னால்
பொசுங்கித்தான் ஆகவேண்டும்

திருடர்களே
பொய்யர்களே
திமிர் பிடித்தவர்களே
உங்கள் ஆணவத்தை
அந்த நெருப்பு
நெருங்கி வரும்
எதுவும்
எதுவும்
எதுவும்
மிஞ்சாது
என்பதை மட்டும்
சொல்லிக் கொள்கிறேன்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment