ஆற்றை
ஆக்கிரமித்திருக்கிறார்கள்
என்று சொல்லி
அவர்களின் வீடுகளை
இடித்துத் தரைமட்டமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்
கட்டிய கனவுகள்
கண்முன்னே
தரைமட்டமாக்கப்படுவதைக்
காணச் சகிக்காமல்
கதறியழுது கொண்டிருக்கிறார்கள்
அந்த எளிய மக்கள்
ஏரிகளை
ஆக்கிரமித்துக்
கட்டப்பட்டிருக்கிறது என்று
எந்தவொரு நிறுவனமும்
இடிக்கப்படாதபோது
இங்கு மட்டும்
ஏன் நீள்கிறது
அதிகாரத்தின் கரங்கள்
ஆறுகளை
ஆக்கிரமித்துக்
கட்டப்பட்டிருக்கிறது என்று
எந்தவொரு
அடுக்குமாடிக் குடியிருப்பும்
அப்புறப்படுத்தப்படாதபோது
இங்கு மட்டும்
ஏன் நீள்கிறது
அதிகாரத்தின் கரங்கள்
என்ற கேள்விகள்
எழாமல் இல்லை
இவ்வளவு காலமாக
வரிகட்டியிருக்கிறார்கள்
இவ்வளவு காலமாக
மின்கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள்
முட்டாள்தனமாக
உங்களுக்கு
ஓட்டும் போட்டிருக்கிறார்கள்
பரவாயில்லை
பாவப்பட்ட அந்த எளிய
ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி
நீங்கள் சொல்லும்
எல்லாக் கதைகளையும்
ஒத்துக் கொள்கிறோம்
ஆற்றின் ஓரங்களிளெல்லாம்
அடுக்குமாடிக் குடியிருப்புகளை
எழுப்பிக் கொண்டிருக்கும்
அந்த முதலாளி
ஆக்கிரமிப்பாளனில்லையா
அவனுக்காக
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தத்
துடித்துக் கொண்டிருக்கும்
நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களில்லையா
மக்களே
புரிந்து கொள்ளுங்கள்
எங்கும் எங்கெங்கும்
அதிகாரத்தின் கரங்கள்
ஒரேமாதிரிதான் இருக்கின்றன
எங்கும் எங்கெங்கும்
ஒரேமாதிரிதான் இடிக்கின்றன
காலமோ
கடவுளோ அல்ல
நீங்கள்தான்
நீங்களேதான்
மாற்றவேண்டும்
உங்களால் முடியும்!
ஜோசப் ராஜா
