மார்க்ஸ் பிறந்தார்

ஹென்றி வோல்கவ் எழுதிய மார்க்ஸ் பிறந்தார் என்ற புத்தகத்தின் வழியாகத்தான் முதன்முதலில் அந்த மாமேதையோடு அறிமுகம் செய்து கொண்டேன். மனித சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு மார்க்ஸ் அளவிற்கு ஒரு ஆசானைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற அன்பு நிறைந்த மந்திர வார்த்தைகளைச் சொல்வதற்கு அந்த இதயத்தில் எவ்வளவு அன்பு நிறைந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சுரண்டப்படும் தொழிலாளர்களின் மேல் பேரன்பும், சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளின் மேல் பெருங்கோபமும் கொண்ட என்னுடைய மார்க்ஸை எப்போதும் எனக்குள் நிறைத்துக் கொள்கிறேன்.

”ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால் அவர் ஒருபோதும் குறையில்லாத, மாபெரும் மனிதனாக முடியவே முடியாது “  என்ற மார்க்ஸின் சொற்களை இருபது வருடங்களுக்கு முன்னால் இதயத்தில் அறைந்து கொண்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. மார்க்ஸின் சொற்களை மந்திரத்தைப்போல் மனப்பாடம் செய்து கொண்டதும், தோழர்களுடனான உரையாடலில் மார்க்ஸை எனக்கும் தெரியும் என்று காட்டிக் கொண்டதிலும் அவ்வளவு பெருமை நிறைந்திருந்தது.

”மனிதகுலத்தின் நன்மைக்காக சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்” என்ற மார்க்ஸின் வார்த்தைகளை சமூக மாற்றத்திற்கான வேலையில் ஈடுபடுத்திக்கொண்ட இளம் தோழர்கள், துவளும் போதெல்லாம் சத்தமாக சொல்லிக்கொண்டதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன். அந்தோ பரிதாபம் அந்த தோழர்களின் பெரும்பாலானோர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டிருப்பதற்கும் நானே சாட்சியாக இருக்கிறேன்.

நாற்பது வயதில் புரியத் தொடங்குகிறது. மார்க்ஸின் சொற்கள் வழிபாட்டுக்குரிய மந்திரங்களல்ல! மார்க்ஸின் வார்த்தைகள் வெறுமனே மனப்பாடம் செய்வதற்கானதல்ல! அது செயல்பாட்டுக்குரிய தத்துவம். மார்க்ஸை உள்வாங்கிக்கொண்ட ஒருவனால் செயல்படாமல் இருக்க முடியாது. எனக்கும் என் கவிதைகளுக்குமான கச்சாப்பொருட்களை மார்க்ஸ் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதையும், வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன்.

உலகத் தொழிலாளர்களுக்காக ஓயாமல் துடித்துக் கொண்டிருந்த அந்த இதயத்தை நெருங்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். யுத்தங்கள் பிணக்குழிகளை நிறைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மார்க்ஸின் தேவை அவசியமாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பொருளாதாரப் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், வெறுப்பின் விஷம் வேகமாகப் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மார்க்ஸே வழியாகவும் விடையாகவும் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

சோம்பல் முறித்து எழுந்து கொள்ளுங்கள். போராட்டக் களத்தில் ஆயுதங்களோடு இருநுறு வருடங்களுக்கும் மேலாக மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். வாழ்க்கை அழகானதாக மாற வேண்டுமென்றால், வாழ்க்கை அர்த்தமானதாக மாற வேண்டுமென்றால் மார்க்ஸோடு இணைந்து கொள்ளுங்கள்.

மார்க்ஸ் பிறந்து விட்டார், நீங்கள்?

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

S.Lokesh 06/05/2024 - 8:35 AM

வாழ்க்கை அர்த்தமானதாக மாற வேண்டுமென்றால் மார்க்ஸோடு இணைந்து கொள்ளுங்கள்… சிறப்புக்குரிய வார்த்தைகள்

Reply

Leave a Comment